சவுக்கு தோப்பில் தீ 12 ஏக்கர் செடி நாசம்
புத்தகரம்:சவுக்கு தோப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், 12 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த செடிகள் நாசமாகின.தாம்பரம் அடுத்த, மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த, சந்தானம் என்பவருக்கு, 12 ஏக்கர் நிலம், வாலாஜாபாத் அடுத்த, புத்தகரம் கிராமத்தில் இருக்கிறது. அதில், சவுக்கு பயிரிட்டுள்ளார். செடிகள், 1 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்துள்ளன.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், அந்த செடிகளுக்கு தீ வைத்துள்ளனர். அதைப் பார்த்த தோட்டப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.நேற்று பகல், 2:30 மணிக்கு, திடீரென சவுக்கு தோப்பு மீண்டும் தீ பிடிக்க துவங்கியுள்ளது. பணியாளர்கள் சிலர், தீ அணைக்க முயற்சி செய்தனர்; பயனில்லை.தீ விபத்தில், 12 ஏக்கர் சவுக்கு செடிகள் மற்றும் பைப் லைன் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்து, சந்தானம் கூறியதாவது:சவுக்கு தோப்பில், தீ விபத்து ஏற்பட்ட பின், பணி யாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும், முடியவில்லை. காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு புகார் தெரிவித்தேன். முதல்வர் வருகைக்கு, பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனங்கள் வெளியே சென்றிருந்தன. அதற்குள், தீ வேகமாக பரவி, சவுக்கு தோப்பு முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.மாலை, சிறிய தீயணைப்பு வாகனம் வந்த பின், மிச்சமிருந்த தீயை அணைத்தோம். இந்த தீ விபத்து குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!