
கன்னி மாடம் டைட்டில் ஏன்? போஸ் வெங்கட் விளக்கம்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் போஸ் வெங்கட். தற்போது கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. சரித்திர கதைகளில் வரும் கன்னி மாடத்தை சமூக கதைக்கு வைத்தது ஏன் என்பது குறித்து போஸ் வெங்கட் கூறியதாவது:
சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. கன்னி மாடம் என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப்படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தங்கியிருக்கும் இடமாகவும் கன்னி மாடம் இருந்தது. அரசர்களின் அந்தப்புறத்தில் கன்னி மாடம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இந்த படத்திற்கு கன்னிமாடம் தலைப்பு ஏன் என்பது படம் வெளிவரும்போது தெரியும். அதில் ஒரு சஸ்பென்ஸ் இருப்பதால் இப்போதைக்கு சொல்ல இயலாது.
நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த கன்னி மாடம். என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!