கர்நாடகா தார்வாட் பகுதியிலுள்ள பாலபீமா என அழைக்கப்படும் நுக்கிகெரி அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் போதும். வேண்டுதல் யாவும் நிறைவேறும்.
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் குருநாதர் வியாசதீர்த்தர். இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பூஜை கைங்கர்யம் செய்தவர். 'ஹிந்துக்களின் பாதுகாவலர்' எனப் போற்றப்படும் இவரால் கட்டப்பட்ட 732 அனுமன் கோயில்களில் இதுவும் ஒன்று. மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் தெற்கு நோக்கியபடி உள்ளது. மூலவர் அனுமனை கண்டதும் அவர் நம்மை நோக்கி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கழுத்தில் துளசி மாலை, இடுப்பில் கச்சம், காதில் குண்டலம், கால்களில் தண்டை அணிந்தபடி நின்ற கோலத்தில் வரம் தரும் வள்ளலாக அவர் இருக்கிறார்.நினைத்தது நிறைவேற வெற்றிலை மாலையும், மாணவர்கள் வெற்றி பெற விளக்கேற்றியும் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துகின்றனர்.
தினமும் ராமநாம கீர்த்தனைகள், அனுமன் சாலீசா பாடுகின்றனர். பிரகாரத்தில் திங்களன்று சிவபெருமானுக்கும், செவ்வாயன்று துர்கைக்கும் விசேஷ பூஜை நடக்கும். சரஸ்வதி, ராமர், சந்தோஷிமாதா, வேணு கோபாலர், ஜகன்நாதர் சன்னதிகளும் இங்குள்ளன.
எப்படி செல்வது: பெங்களூருவில் இருந்து 450 கி.மீ.,
விசேஷ நாள்: சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 0836 - 246 0983
அருகிலுள்ள தலம்: சந்திரமவுலீஸ்வரர் கோயில் (நிம்மதியாக வாழ)
நேரம்: காலை 6:00 - இரவு 7:30 மணி