ஆக்சிஜன் இல்லாத காற்று உயிருக்கு ஆபத்து!
ஆக்சிஜன் இல்லாத காற்று எங்கிருக்க முடியும் என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். சாக்கடை நீரை நிரப்பி வைக்கும், 'செப்டிக் டேங்'கை அவ்வப்போது, சுத்தம் செய்கின்றனர்.
சாக்கடை நீரை, பம்ப் மூலம், முழுமையாக வெளியேற்றி விடுகின்றனர்; பின், டேங்கை சுத்தம் செய்ய, மேன்ஹோல் மூடியை திறந்து, ஆட்களை உள்ளே அனுப்புகின்றனர்.
டேங்கில், தண்ணீர் இல்லையே தவிர, விஷ வாயுக்கள் இருக்கின்றன; ஆக்சிஜன் இருப்பதில்லை; இப்படி, ஆக்சிஜன் இல்லாத காற்றைச் சுவாசித்தால், சில நிமிடங்களிலே இறப்பு நிச்சயம்.
அதவாது, 'செப்டிக் டேங்க்' மற்றும் ஆழமான கிணற்றிற்குள் ஒருவரை வேலைக்கு அனுப்பும் முன், ஒரு உலோகப் பாத்திரத்தில், கட்டி கற்பூரத்தை ஏற்றி, கயிற்றின் மூலம், செப்டிக் டேங்கினுள் அனுப்பி, பாருங்கள்.
கற்பூரம் அணைந்து விட்டால், உள்ளே ஆக்சிஜன் இல்லை என தெரிந்துக் கொள்ளுங்கள்.
கிராமங்களில், ஆழமான கிணற்றில் இறங்கி வேலை செய்யும் முன், உயிருள்ள கோழியை, கயிறு கட்டி, கீழே இறக்குவர். 10 நிமிடத்துக்குப்பின், வெளியே இழுப்பர்; கோழி, உயிருடன் இருந்தால், கிணற்றின் அடியில், ஆக்சிஜன் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், எப்படித்தான் வேலை செய்வது என்ற கேள்வியை கேட்கலாம். கம்ப்ரெசரிலிருந்து, குழாய் மூலம் காற்றை அனுப்பலாம். இப்படி செய்து, ஆக்சிஜன் மீட்டரை உள்ளே விட்டு, எந்த அளவு ஆக்சிஜன் இருக்கிறது என்று உறுதி செய்து, பாதுகாப்புடன் தான், உள்ளே அனுப்ப வேண்டும்.
சிறு ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டி, மூக்குடன் இணைத்தும் அனுப்புகின்றனர்; இந்த துறையில், அனுபவம் வாய்ந்த திறமைசாலிகளை இந்த வேலைகளில் உபயோகித்துக் கொள்ளுவது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!