மனசாட்சியுள்ள நீதியரசர்களுக்கு,
ரத்தமும், சதையுமான இந்த சம்பவத்தை நீங்க மறந்திருக்க மாட்டீங்க! 2012, நவம்பர் 12ம் தேதி, சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மோனகன் பள்ளியில ஏழாம் வகுப்பு படிச்சுட்டு இருந்த என் பையன் மேல, பள்ளியோட சுற்றுச்சுவர் விழுந்து அவனோட இடதுகால் சிதைஞ்சிடுச்சு. அன்னைக்கு அந்த சுவர் தானா சரியலை; பொறுப்பில்லாம கிரேன் ஓட்டிட்டு வந்தவரால சரிஞ்சது. இப்படி ஒரு குற்றம் செஞ்சவங்க தண்டனையை அனுபவிக்கணுமா; கூடாதா?
இந்த வழக்கை விசாரிச்ச சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், கடந்த அக்டோபர் 20ம் தேதி வழங்கின தீர்ப்புல, 'விபத்திற்கு முழு பொறுப்பேற்று, இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மனு தேதி 21.8.2013ல் இருந்து தீர்ப்பு தேதி வரை கணக்கிட்டு, ஒன்பது சதவீத வட்டியோடு, முப்பது நாட்களுக்குள் மனுதாரரது வங்கிக்கணக்கில் கிரேன் உரிமையாளர் செலுத்த வேண்டும்'னு உத்தரவு போட்டுச்சு.
என் பையனோட மொத்த கனவையும் சூறையாடுனதுக்கு இந்த இழப்பீடு பத்தாதுன்னு மேல்முறையீடு செய்யச் சொல்லி, எங்க வக்கீல்கிட்டே கேட்டோம். ஆனா, அது நடக்கலை. சரி, தீர்ப்பாயம் கொடுக்கச் சொன்ன இழப்பீடாவது கிடைக்கும்னு பார்த்தா, அதுவும் இப்பவரைக்கும் வந்துசேரலை.
'போனது ஒரு கால் தானே; நியாயம் கேட்குறது ஏழைத் தாய் தானே'ன்னு அதிகார வர்க்கம் அவமானப்படுத்துது. நீங்களாவது உதவுவீங்களா?
- கிரேன் விபத்தில், 85 சதவீத உடல் ஊனமுற்ற மாணவன் நவீனுக்காக இழப்பீடும், நீதியும் கேட்டுப் போராடும் தாய் லட்சுமி, ஆயிரம்விளக்கு, சென்னை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!