விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாட பிரிவில் படித்தேன். வகுப்பில், 72 மாணவ, மாணவியர் இருந்தனர். வகுப்பை நடத்துவதே ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கும்; திணறுவர்.
வணிகவியல் ஆசிரியர், மாணவர்களை எளிதாக கையாண்டார். புரியும் வகையில், கதை சொல்வது போல் பாடம் நடத்தினார். நன்றாக படிப்பவர்களை, சிறப்பு மதிப்பெண் எடுக்க உற்சாகமூட்டினார். குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் திறனை அதிகரிக்க, தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி உதவினார்.
ஒவ்வொரு தேர்வும் முடிந்து, விடைத்தாள் கொடுக்கும் போது, உடன், ஒரு சிறிய தாள் இணைத்திருப்பார். அதில், சிறு, குறு, பெரு வினாக்கள் என, ஒவ்வொரு பிரிவிலும் மாணவர் பெற்ற மதிப்பெண்ணை தனித்தனியாக எழுதி, மொத்த மதிப்பெண்ணை இறுதியில் குறிப்பிட்டு இருப்பார். இது, அனைவரையும் நன்றாக படிக்க துாண்டியது. அடுத்தடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வைத்தது.
இதன்மூலம், மிகப் பெரிய பாடத்தை கற்றேன். 'எந்த பாடத்தையும், மொத்தமாக படிக்காமல், சிறு பிரிவுகளாக பிரித்து படிக்க வேண்டும்; பின் தங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்...' என்பது தான் அந்த பாடம்.
எம்.காம்., இறுதி ஆண்டு படிக்கிறேன். இப்போதும், இந்த முறையையே கடைபிடிப்பதுடன், பிறருக்கும் சொல்லித்தருகிறேன். இதற்கு காரணமான ஆசிரியரை, நன்றியுடன் நினைக்கிறேன்.
- கோ.சந்தோஷ்குமார், விருதுநகர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!