சென்னை, பரங்கிமலை, கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில், 2008ல், 7ம் வகுப்பு படித்தேன். உடன், சேஷாத்ரி என்பவனும் படித்தான்; அவன் சாஸ்திர சம்பிரதாயம் பார்ப்பான்.
ஒரு நாள், அறிவியல் ஆசிரியர், இளங்கோவன், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேல் விதானத்தில் உலவிய பல்லி, சேஷாத்ரி தலையில் விழுந்தது. பதறி எழுந்தவனை சமாதானப் படுத்தி, வகுப்பை தொடர்ந்தார். ஆனால், அவன் பாடத்தில் கவனம் செலுத்தாமல் தடுமாறினான்; கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், சோகமாக இருந்தான்.
நன்றாக படிக்கும் அவனை, 'பல்லியை நினைத்துக் கொண்டிருக்காதே... படிப்பில் கவனம் செலுத்து...' என்றார் ஆசிரியர். அதற்கு அவன், 'பல்லி தலையில் விழுந்தால், மரணம் சம்பவிக்கும் என, பாட்டி கூறியுள்ளாரே...' என்றான்.
இதைக் கேட்டு சிரித்த ஆசிரியர், 'முட்டாள்தனமாக கற்பனை செய்யாதே... நவீன, அறிவியல் உலகில், மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்க கூடாது. மரணம் சம்பவிக்கும் என்று பாட்டி கூறியது பல்லிக்குத் தான், உனக்கு இல்லை...' என்று அறிவுறுத்தியபடி, 'கீழே பாருடா...' என்றார்.
தரையில், 'ஷூ' வில் மிதிபட்டு, பல்லி குற்றுயிராக துடித்துக் கொண்டிருந்தது. 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது, பொறியியல் படிப்பை முடித்துவிட்டேன். அன்று, அந்த ஆசிரியரின் அறிவுரை, என்னை மூட நம்பிக்கைகளில் மூழ்கவிடாமல், இன்றும் அறிவியல் பூர்வமாக சிந்திக்க துாண்டுகிறது.
- எம்.தாரீக், சென்னை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!