Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'யூ டூ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில்,தமிழக, காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:தமிழகத்தில், மக்கள் உரிமைக்காக யாராவது போராடினால், ஒன்று அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர் அல்லது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவர் என்பது போன்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. போராடும் நபர்களை, அடையாளம் கண்டு நசுக்குவதை, தங்கள் அன்றாட வாழ்க்கை முறையாக, தமிழக அரசு பின்பற்றி வருகிறது. 'பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரம்' என, பாரதியார்கூறினார். இன்று, அது தான் நடக்கிறது.


தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு பேட்டி: தமிழகத்தில் சிலர், போராட்டங்கள் மூலம், மக்கள் மத்தியில் தங்களை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் இயக்கங்களாக செயல்படும் சிலரின் துாண்டுதல் என்பதை அறியும்போது, மக்களுக்கு உண்மை நிலை புரியும். போராட்டங்களை நடத்தி, தங்களை முன்னிலைப்படுத்தும் சுயநலவாதிகளுக்கு, ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், அனைத்தும் தானாக சரியாகி விடும்.


இந்திய கம்யூ., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், சி.மகேந்திரன் பேட்டி: நம் நாட்டில், கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட வரிகளால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. ௨௦௧௩ல், பெட்ரோல், டீசல் மூலம், அரசுக்கு, ௮௫ ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைத்தது. நிகழாண்டில் அது, ௨.௩௬ லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு, வரி உயர்வே காரணம். ஆனால், விலை உயர்வுக்கு, 'சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணம்' என, பிரதமர் மோடி கூறி வருகிறார். இதைவிட மோசடி, வேறெதுவும் இருக்க முடியாது.

அரசியல் செய்ய, விஷயம் கிடைத்த மகிழ்ச்சியுடன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும், புரிந்தும் புரியாதது போல், 'பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்' என, முதல்வர் பழனிசாமி மார்தட்டுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. மத்திய, மாநில அரசுகளின் நாசகார திட்டங்களை எதிர்த்து போராடும் போது, காவல்துறை மூலம் அடக்கி, ஒடுக்கி விடலாம் என, பழனிசாமி அரசு நினைப்பது, எதிர்விளைவுகளைத் தான்உருவாக்கும்.

புதுச்சேரி, பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி: 50 ஆண்டு கால, காங்., ஆட்சியில் தராத அளவுக்கு, புதுவை அரசு கோரிய, ௭,௫௩௦ கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இனியும் மத்திய அரசை குறை கூறுவதை, முதல்வர்நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். 'புதுச்சேரியில், பா.ஜ., டிபாசிட் வாங்கவில்லை' என, அவர் குறை கூறுகிறார். ஒரு பைசா செலவு செய்யாமல், எந்த தொகுதியிலாவது என்னுடன் போட்டியிட தயாரா என, நாராயணசாமிக்கு சவால் விடுகிறேன்.



வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement