பேச்சு, பேட்டி, அறிக்கை
'அவங்க அரசியல்ல நுழையிறது இருக்கட்டும்... நீங்க எதுக்கு, 'வாய்ஸ்' குடுத்து, மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், இயக்குனர் பாரதிராஜா பேச்சு: 'கட் - அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்வதையும், மாலை அணிவிப்பதையும் தடுக்காத நடிகர்கள், கடைசியில் ரசிகர்களை முட்டாள்களாக்கிவிட்டு, 'என்னை பின்தொடர்ந்து வாருங்கள்...' என, அரசியலில் நுழைகின்றனர். இப்படியொரு கேவலமான சூழ்நிலை, தமிழகத்தில் நிலவி வருகிறது.
@@த.மா.கா., துணை தலைவர் ஞானதேசிகன் பேட்டி: 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கின் தீர்ப்பை, அரசியல் தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்து விமர்சிப்பது, ஜனநாயகத்திற்கும், நீதிபரிபாலனத்திற்கும் எதிரானது. 'குட்கா வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, இதே நீதிபதிகள் தீர்ப்பு அளித்தபோது, கைதட்டி ஆரவாரம் செய்தவர்கள், இந்த தீர்ப்பை மட்டும் ஏன் எதிர்க்கின்றனர்?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு: புனித ஸ்தலமான திருப்பதி மண்ணில், ஆந்திர மக்களிடம், சிறப்பு அந்தஸ்து தொடர்பான வாக்குறுதியை, பிரதமர் மோடி அளித்தார். ஆனால் அதன்பின், அதை அவர் மறந்து விட்டார். இது தொடர்பாக, 29 முறை டில்லிக்குச் சென்று, பிரதமரிடம் பேசினேன். ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து, ஆந்திர மக்களின் அடிப்படை உரிமை. இந்த விவகாரத்தில், பா.ஜ.,வும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசும், கூட்டு சதியில் ஈடுபடுகின்றன.
பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேச்சு: அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், லாலு பிரசாத்தின் ஆதரவின்றி வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில், காங்., கட்சி உள்ளது. எனவே தான், லாலு பிரசாத்தை, ராகுல் சந்தித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரே ஊழலை ஆதரித்தால், எப்படி நல்லாட்சியைத் தர முடியும்?
மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்ரமணியன் பேட்டி: 'தமிழகத்தில், தேவையான அளவு மின்சாரம் இருப்பதால், தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்' என, மின் துறை அமைச்சர் சொல்கிறார்; அது உண்மையல்ல. தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி, தமிழகத்தில் இல்லை. அதனால், அனல், அணு மின் நிலையங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெறுவதோடு, வெளியில் குறைந்த நிலையில் மின்சாரம் வாங்கி வினியோகம் செய்ய வேண்டும்.
'கிணற்றுத் தவளையாக இருக்கும் ஒரு சில சக அமைச்சர்களுக்கான அறிவுரையோ இது...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு: புத்தக வாசிப்பு, மனிதனை சிந்தனையாளனாக மாற்றுகிறது. புத்தக வாசிப்பையே சுவாசமாகக் கொண்டவர், அண்ணாதுரை; மூன்று லட்சம் புத்தகத்தை வாசித்து சேகரித்தவர், அம்பேத்கர்; தன் நுாலகத்தையே பெரும் செல்வமாக மதித்தவர், ஜெயலலிதா. நாமும், புத்தகங்களை வாசித்து, சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!