கடன் வாங்கியவர்களை கட்சியில் சேர்க்க முடிவு!
''கல்லுாரி கல்வி இயக்குனருக்கு, எதுக்கு பதவி நீட்டிப்பு குடுத்திருக்காங்கன்னு தெரியலீங்க...'' என, அரட்டைக் கச்சேரியைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''என்ன விவகாரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''திருச்சி அரசு கல்லுாரியில முதல்வரா இருந்தவங்க அவங்க... கல்லுாரி கல்வி இயக்குனரா, 2016ல பதவி ஏத்துக்கிட்டாங்க... போன வருஷம் நவம்பர்ல, 'ரிடயர்மென்ட்'டு... ஆனா, பதவி நீட்டிப்புல, இந்த வருஷம் ஜூன் வரைக்கும் இருக்கப் போறாங்க...
''இதைப் பார்த்ததும், இயக்குனரகத்துல, பதவி உயர்வுக்காக காத்திட்டிருக்குற பல பேரு, குமுறிப் போறாங்க... இதோட, இணை இயக்குனர், மண்டல இயக்குனர்ன்னு பலருக்கும் பணி நீட்டிப்பு குடுத்திருக்காங்க...
''வேணுங்கற பதவி உயர்வுக்கு, பல பேராசிரியர்கள் காத்திட்டிருக்காங்க... ஏழாவது சம்பள கமிஷனையும் கவனிக்கலே... உயர் கல்வித் துறை எங்கயோ போயிட்டிருக்குன்னு, எல்லாரும் புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''நேருவை ஓரங்கட்ட வேண்டிய எல்லா வேலையும் நடந்துண்டு இருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''என்னது, பிரதமர் மோடி பேசின விவகாரத்தைச் சொல்ல வர்றீங்களா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''இல்லே ஓய்... அவர் ஒண்ணும் தப்பா பேசினா மாதிரி தெரியலையே... நான் சொல்ல வந்த விஷயம் வேற... திருச்சியில, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழிக்கும், முன்னாள் அமைச்சர் நேருவுக்கும், எப்பவுமே ஏழாம் பொருத்தம்...
''இந்த லட்சணத்துல, நேருவோட, பி.ஏ.,வா இருந்த முத்துசெல்வம், செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சிச்சு, வேறொரு நிர்வாகிகிட்டே போன்ல பேசின விவகாரம், மகேஷ் கையில கிடைச்சுடுத்து...
''இதை ஆதாரமா வைச்சு, ஸ்டாலின்ட்ட சொல்லி, நேருவை ஒரேடியா ஓரங்கட்ட பிளான் போட்டுண்டு இருக்கறதா, திருச்சி வட்டாரம் சொல்றது ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''கடன் வாங்கினவங்க எல்லாரையும், கட்சியில சேர்க்க திட்டமிட்டிருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''மத்திய அரசு சார்புல, முத்ரா வங்கி கடன் திட்டத்தின் கீழ், தமிழகத்துல மட்டும், 54 லட்சம் பேருக்கு கடன் குடுத்திருக்காவ... இதுல, 13 லட்சம் பேர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவங்க... பெண்கள், 11 லட்சம் பேர்...
''எல்லாரோட பேரு, விலாசத்தையும், பா.ஜ., தலைவர் தமிழிசை உத்தரவுல, சேகரிச்சிட்டிருக்காங்க... இவங்க எல்லாரையும் கூப்ட்டு மாநாடு நடத்தி, அங்க வர்றவங்கள்ல விருப்பமானவங்களை, கட்சியில சேர்க்கலாம்ன்னு திட்டம் வே...'' என்றார் அண்ணாச்சி.
அரட்டை முடிந்தது; நண்பர்கள் நடையைக் கட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!