கர்ப்பிணிகளை காக்க வைக்கலாமா!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில், 520 கர்ப்பிணிகளுக்கு, சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்த விழா ஏற்பாட்டாளர்கள், அவர்களை வரிசையாக உட்கார வைத்தனர். எம்.எல்.ஏ., நீதிபதி மற்றும் அதிகாரிகள் வந்ததும், நிகழ்ச்சி, 11:30க்கு துவங்கியது. குழந்தைகள் நல அலுவலர்கள், டாக்டர்கள், ஆலோசனை வழங்கினர்.
பிற்பகல், 1:00 மணிக்கு பேச வந்த உசிலம்பட்டி, ஆர்.டி.ஓ., சுகன்யா, 'டெங்கு கொசுக்கள், நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும்' என்பதில் துவங்கி, அதன் வாழ்நாள், அதனால் ஏற்படும் பாதிப்பு என பாடம் நடத்தத் துவங்கினார்.
பின் வரிசையில் இருந்த மூதாட்டி ஒருவர், 'ஏம்பா... காலைல, 8:00 மணிக்கே கூட்டம்னு, மகளை கூட்டிட்டு வந்துட்டேன். மூணு நாலு மணிநேரமா, ஒண்ணுமே சாப்பிடாம உட்கார வச்சுருக்காங்க... ரெண்டு உசுரோட இருக்கற பிள்ளைகிட்டே, பசி நேரத்துல பாடம் நடத்துனா, காதுல ஏறுமா பா... சாப்பிட ஏதாச்சும் குடுங்கப்பா...' எனக் கேட்க, சமூக நலத் துறை பணியாளர்கள், அதை காதில் வாங்காதது போல் நழுவினர்.