பா.ம.க., - எம்.பி., அன்புமணி அறிக்கை: சென்னையில் உள்ள, மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தை, கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள, கரும்பு உற்பத்தி மையத்தை, உ.பி.,யின் தலைநகர் லக்னோவில் உள்ள, கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடனும், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை, கர்நாடகாவுக்கு மாற்றவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை, கைவிட வேண்டும்.
மேலும், நாட்டில் உள்ள, 140 வேளாண் ஆராய்ச்சி மையங்களை, 70 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வேளாண் ஆராய்ச்சிகள் பின்னடைவை சந்திக்கும்.புதுவை முதல்வர்,
நாராயணசாமி பேட்டி: புதுவையில் இருந்து, ஐதராபாதுக்கு விமான சேவையை, ஒடிசா ஏர் நிறுவனம் துவங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள், புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கோவை, கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு நேரடியாக விமான சேவையை துவங்க வேண்டும் என, கோரியுள்ளோம். அது நிறைவேறினால், புதுவையில், வர்த்தகமும், சுற்றுலாவும் மேம்படும்.
'உ.பி., உள்ளாட்சி தேர்தல்ல வாங்குன அடியால, பா.ஜ.,வை ஒண்டிக்கு ஒண்டியா சமாளிக்க முடியாது என கருதி, கூட்டணி சேர்க்கும் நோக்கில்' சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி: பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என, பல பொய்களை கூறி, மக்களை, பா.ஜ., ஏமாற்றி வருகிறது. மேலும், மதச்சார்பற்ற தன்மையை அது ஏற்றுக்கொள்ளாததால், பெரும் தீமைகள் விளையும். அதனால், மதச்சார்பின்மைக்காக போராடும் அனைத்து கட்சிகளையும், சமாஜ்வாதி ஆதரிக்கும்.
'மத்தியில, 10 வருஷமா பிரதமரா இருந்தப்ப, பேசா மடந்தையா இருந்தவர், இப்படி பொளந்து கட்டுறாரே...' என வியக்கும் வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு:உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழைகள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு நிவாரணம் அளிக்க வழிவகை செய்யாமல், ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு சுமத்தியது. இதனால், தொழில்கள் முடங்கி, பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. 2016 - 2017ல், சீனாவில் இருந்து, 1.96 லட்சம் கோடி ரூபாய்க்கு, பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், 2.41 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி ஆகி உள்ளது. இதனால், சீனா தான் பயன் அடைந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!