மன்னியுங்கள் வாஞ்சிநாதன்
எங்கள் வ.உ.சி.,யை சிறையில் தள்ளி செக்கிழுக்க வைப்பதா என வெகுண்டெழுந்த மக்களை காக்கை குருவி போல சுட்டுத்தள்ள உத்திரவிட்ட ஆஷ் துரைக்கு மரணத்தின் வலி என்ன என்பதை உணர்த்த வாஞ்சிநாதன் கொடுத்த பரிசுதான் துப்பாக்கி குண்டு.
அறிக்கை கொடுப்பார்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் அதிகம் போனால் உண்ணாவிரதம் இருப்பார்கள் அகிம்சையே வலிமை என்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு பேரதிர்ச்சி தந்தவர்தான் வாஞ்சிநாதன்.
துப்பாக்கிக்கு துப்பாக்கிதான் பேசும் என்பதை நிருபித்தவர் அந்த செங்கோட்டை தந்த சிங்கம் வீரன் வாஞ்சிநாதனின் 110 வது நினைவு தினம் இன்று.
மனைவியுடன் கொடைக்கானல் செல்வதற்காக மாற்று ரயிலுக்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த கலெக்டர் ஆஷ்சை எவ்வித பதட்டமும் இல்லாமல் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு ஒடி வந்தவர்கள் தன்னைப் பிடித்துவிடுவார்கள் என்பது தெரிந்ததும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து போனார்.
ஆஷ்க்கு தான் சுடப்படுவது தெரியாது ஆனால் வாஞ்சிநாதனுக்கு தான் மரணிக்கப்போவது தெரியும். தெரிந்தும் இந்த காரியத்தில் இறங்கினார் என்றால் அதற்கு மகத்தான மனதைரியம் வேண்டும் அந்த தைரியம் அவருக்கு நிறையவே இருந்தது.
ஆஷ் துரையை யார் கொல்வது என்பதை முடிவு செய்ய முதல் நாள் அடர்ந்த கானகத்தினுள் தீப்பந்தத்தை விட அதிக சுடருடன் எரியும் கண்களுடன் காளி சிலை முன் கூடியிருந்த இளைஞர்கள், வாஞ்சியை இந்த செயலில் இருந்து விலகியிருக்கக் கேட்டுக் கொண்டனர். அதற்கு காரணமாக இப்போதுதான் உனக்கு திருமணம் நடந்திருக்கிறது இன்னும் அந்த மணமாலை கூட வாடவில்லை ஆகவே இதில் நீ பங்கேற்க வேண்டாம் என்று நண்பர்கள் சொன்னபோது அதெல்லாம் கூடாது என காளியைவிட அதிக உக்ரம் கொண்டார் வாஞ்சி.
என் மேல் உள்ள கரிசனத்தில் என் பெயரை எழுத மாட்டீர்கள் ஆகவே நானே என் பெயர் உள்பட எல்லோர் பெயரையும் எழுதுகிறேன் என்று சொல்லி எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி காளி சிலை முன் குலுக்கி போட்டு எடுத்த போது வந்த பெயர்தான் வாஞ்சிநாதன்.எல்லா சீட்டிலும் அவர் தன் பெயரே எழுதிப்போட்டார் என்றும் சில குறிப்புகள் சொல்கின்றன.
தேர்ந்து எடுக்கப்பட்ட சீட்டில் தன் பெயர் வந்ததும் இந்த நாள் எனக்கு பொன்நாள் காளி உத்திரவிட்ட நன்நாள் என்று ஆனந்தக்கூத்தாடினார்.
வாஞ்சிநாதனின் தியாகம் விடுதலை போராட்ட வேள்வியை கொளுந்துவிட்டு எரியச் செய்தது தேசமும் விடுதலை பெற்றது
ஆனால் வீரன் வாஞ்சிநாதனுக்கு அன்று முதல் இன்று வரை வஞ்சனைகள் தொடரத்தான் செய்கிறது.
ஆஷ் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து நினைவு சமாதி மண்டபம் எல்லாம் கட்டினர் ஆனால் வாஞ்சிநாதன் உடலை என்ன செய்தனர் என்பது இன்று வரை தெரியாத மர்மங்களில் ஒன்று.
இளம் விதவையான அவரது மனைவி சுதந்திரத்திற்கு பிறகு கூட எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் சிரமப்பட்டு இறந்து போனார்.
வாஞ்சிநாதன் இறந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் வைக்கப்பட்டது
ஆனால் இன்று வரை வாஞ்சியின் நினைவாக அங்கு அவரது படமோ அல்லது நினைவுச் சின்னமோ எதுவும் இல்லை அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட கட்டிடம் கூட இடித்து தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.
வாஞ்சியின் மீது வாஞ்சை கொண்ட நாட்டுப்பற்றாளர்கள் சிலர் அவரது நினைவு நாளான்று மணியாச்சி ரயில் நிலையத்திற்கு சென்ற போது அங்கு இருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு சில நிமிடம் மவுனமாக நின்றுவிட்டு போங்கள் என்று மட்டும் கடந்த வருடங்களில் சொன்னார்கள்
இதோ வரலாற்று நாயகன் வாஞ்சிநாதனின் தீரம் செறிந்த வரலாற்றை மவுனமாக சுமந்தபடி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வழக்கம் போல இயங்கிக் கொண்டு இருக்கிறது இந்தக் கட்டுரையை அடிக்கும் இந்த மாலை நேரம் வரை வாஞ்சி நாதனின் பெயரைச் சொல்லிக் கொண்டு யாரும் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.
மன்னியுங்கள் வாஞ்சிநாதன், எங்கள் மக்கள் ரேசன் கடையிலும்,டாஸ்மாக் கடையிலும் இருக்கிறார்கள்
-எல்.முருகராஜ்.
வாசகர் கருத்து (51)
R.........
இந்த கேடு கெட்ட மக்களுக்குகாக இன்னுயிர் நீத்த மற்றொரு ............
வாஞ்சியின் செயல்பாடுகள் இன உணர்வில்லாத பொது நோக்குடையவை. வாஞ்சி யின் பார்வை சிம்ம பார்வை. பிராம்மணரில் தோன்றிய தனி பிறவி. அவரை இனியாகிலும் பாஜக மக்களிடையில் அடையாளப்படுத்துவது அவசியம். நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை அழித்தது மட்டுமில்லாமல் தலித்கள் மூலம் கிறுத்துவ மதம் பரப்பியது இந்து தர்மத்திற்கு இழைத்த அநீதி
நாட்டின் விடுதலைக்காக போராடிய வர்களின் நினைவை இரு கழகங்களும் இலவசங்களை கொடுத்து மழுங்க டித்து விட்டார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அரசு சார்பில் விழா அந்த விழாவின் பொது அரசு விடுமுறை என்றால் மட்டுமே மக்கள் கலந்துகொள்ளும் வழக்கம் உள்ளது..... காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர், காமராசர் பிறந்தநாள் நினைவுநாள் போல தியாகி வாஞ்சிநாதன் அவர்களுக்கும் அரசு விழாவாக கொண்டாண்ட வேண்டும்...