அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்சரசில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட வந்த முதல்வரை வரவேற்க சிவப்பு கம்பளம் விரித்தனர் அதிகாரிகள். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பச்சை கம்பளமாக மாற்றி விட்டனர்.
ஐ.எஸ்.ஐ., பின்னணி
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ராஜாசான்சி கிராமத்தில், நிரன்காரி என்ற பழமைவாத சீக்கிய பிரிவின் ஆசிரமம் உள்ளது. இங்கு நேற்று பிராத்தனை நடந்து கொண்டிருந்த போது, கையெறி குண்டுகள் வீசப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த செயலுக்கு காரணமானவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆடம்பர வரவேற்பு
இச்சூழ்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு இன்று(நவ., 19) முதல்வர் அமரிந்தர் சிங் செல்வதாக அறிவிக்கப்பட்டது. அவரை வரவேற்க அதிகாரிகள் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சிவப்பு கம்பளம் விரித்தனர்.
இதற்கு உள்ளூர் மக்களும், பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சிவப்பு கம்பளத்தை அகற்றி விட்டு பச்சை கம்பளம் விரிக்கப்பட்டது. இது குறித்து சீனியர் எஸ்.பி., பரம்பால் சிங் கூறுகையில்,'' முதல்வர் வரும் இடத்தில் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் தான் கூறினர். அதற்கான பணியில் ஈடுபட்ட போது, ' இத்தனை ஆடம்பரம் தேவையா?' என, கேள்வி எழுப்புகின்றனர். இது சரியல்ல. எனினும், சிவப்பு கம்பளத்தை அகற்றி விட்டோம்,'' என்றார்.