ADVERTISEMENT
புதுடில்லி: ரபேல் விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல் கூறும் தகவல் தவறானது என்று மத்திய அமைச்சர்கள் மறுத்துள்ளனர்.
ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அம்பானிக்கு பிரதமர் மோடி உதவியதாகவும் காங்., தலைவர் ராகுல் இன்று கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் ஆகியோர் மறுத்துள்ளனர்.
நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
ரபேல் ஒப்பந்தம் காங்., தலைமையிலான ஆட்சியில் தான் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் காலம் தாழ்த்தப்பட்டது. ஊழலுக்கு வழிவகுப்பதில் காங்கிரஸ் காரணமாக இருந்தது. ஊழலின் ஊற்றாக காங்கிரஸ் ரபேல் குறித்து பேச அருகதை இல்லை.
பா.ஜ., ஆட்சியில் 36 ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதால் ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட்டது. நமது படையினரின் பலத்திற்காகவே இந்த விமானங்கள் வாங்கிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ராகுல் தரம் தாழ்ந்து பொய்களை கூறி தவறான தகவலை பரப்புகிறார். ரபேல் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம். ஆனால் ராகுல், சீனா, பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக பேசி வருகிறார். ராகுல் அரசியல் லாபத்திற்காக பேசுகிறார். இல்லாததை கூறும் தலைவராக ராகுல் விளங்குகிறார். பொறுப்பற்ற தன்மையில் ராகுல் பேச்சு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
ராணுவ அமைச்சகம் மறுப்பு
ராணுவ அமைச்கம் சார்பில் கூறப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; ரபேல் விவகாரத்தில் அம்பானி நிறுவனத்திற்கு யாரும் உதவி செய்யவில்லை. இந்த நிறுவனத்தை தேர்வு செய்ததிலும் மத்திய அரசுக்கு பங்கு கிடையாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.