புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளபப்பட உள்ளது.
இந்த விஷயத்தில் பா.ஜ., தைரியமாக உள்ளது. பா.ஜ.,வுக்கு இந்த தைரியம் வர காரணம், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாதது தான் என தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மை:
லோக்சபாவில், தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிருபிக்க 268 எம்.பி.,க்கள் தேவை. பிற கட்சிகளின் ஆதரவே இல்லாமல் பெரும்பான்மை நிருபிக்க பா.ஜ.,வால் முடியும். அந்த வகையில் பா.ஜ.,விடம் 273 எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் 314 எம்.பி.,க்கள் உள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளிடம் ஒட்டு மொத்தமாக 220 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். இதில்,
அ.தி.மு.க., (37), பிஜூ ஜனதா தளம் (20), தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (11), இந்திய தேசிய லோக் தளம் (2), சுயேச்சைகள் (3) ஆகிய மாநில கட்சிகளிடம் மொத்தமாக, 73 எம்.பி.,க்கள் அடங்கும். இந்த 73 எம்.பி.,க்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே. இவர்கள் பா.ஜ.,வுக்கும் ஆதரவு இல்லை; காங்கிரசுக்கும் ஆதரவு இல்லை என்று தான் உள்ளனர். இவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை புறக்கணித்தால், ஆளும் கட்சிக்கு பெரிய உதவியாகி விடும். சபைக்குள் இருக்கும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் கட்சி எளிமையாக வென்று விடும்.
அதே நேரம், பா.ஜ., கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட சில கட்சிகள், அதிருப்தியில் உள்ளன. சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட சில சொந்த கட்சி எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு நெருக்கடியை தரலாம். இதை சமாளிக்க பா.ஜ.,வால் முடியும் என்பதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தைரியமாக எதிர்கொள்ள தயராகி விட்டது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
-----------
லோக்சபா
-----------
மொத்த எம்.பி.,க்கள் - 544
தற்போது எம்.பி.,க்கள் - 534
காலியிடம் - 10
------------
தேசிய ஜனநாயக கூட்டணி - 314
பா.ஜ., - 273
பா.ஜ., ஆதரவு கட்சிகள் - 41
---------------
எதிர்க்கட்சிகள் - 147
காங்., - 48
திரிணமுல் காங்., - 34
தெலுங்கு தேசம் - 16
------------
யாருடனும் சேராத கட்சிகள் - 73
அ.தி.மு.க., - 37
பிஜூ ஜனதா தளம் - 20
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி - 11
இந்திய தேசிய லோக் தளம் - 2
சுயேச்சை எம்.பி.,க்கள் - 3